Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Tuesday 21 June 2016

குட்டிக்கதை

ஒரு பாட்டி, காகம் குட்டிக்கதை.

இந்த கதையை ஒரு முறையாவது எதாவது ஒரு வகையில் கேட்டிருப்போம்.

ஆனால் இப்படி கேட்டிருக்க வாய்ப்பு இல்லை

ஆம்,
இது நாம் அனைவரும் அறிந்த பாட்டி வடை சுட்ட கதை.
இந்த கதையை நான் ஒரு காணொளியில் கேட்டேன்.

அந்த காணொளியில் யார் பேசினார் என என்னக்கு தெரியவில்லை,
அவர்களுக்கு என் நன்றிகள்.

*குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் முறையில் இருந்து நிறைய
நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

கதைக்கு வருவோம்.....

ஒரு ஊரில் ஒரு காகம் இருந்தது.
ஒரு நாள் அதற்கு மிகவும் பசிக்கவே,
வடை சுடும் பாட்டியை தேடி சென்றது. 

பாட்டி எனக்கு ஒரு வடை கொடு என்று காகம்
பாட்டியிடம் மிக பணிவாக கேட்டது.

(இங்கே அவர்கள் குழந்தைகளுக்கு நேர்மையை கற்றுக்கொடுகிறார்கள்)

காகம் தனக்கு தேவையான வடையை திருடவில்லை. மாறாக,
பாட்டியிடம் நேர்மையாக தனக்கு தேவையான வடையை கேட்டது.

பாட்டி தன்னுடைய விறகுகள் ஈரமாக இருப்பதால்
வடை சுடுவது கடினம் என்று காகத்திடம் கூறவே, காகம் யோசித்து.

பாட்டி வடை சுடுவதற்காக பறந்து சென்று காய்ந்த சுள்ளிகளை பொறுக்கி வந்தது.

(இங்கே சீனர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கடின உழைப்பை கற்றுக்கொடுகிறார்கள்)
காகம் தனக்கு தேவைப்பட்ட வடைக்காக கடினமாக உழைத்தது.

விறகு கிடைக்கவே பாட்டி வடையை சுட்டாள்.
வடையை சுட்டு முடித்த மகிழ்ச்சியில் காகத்தை மறந்தாள்.

(இங்கே சீனா நாட்டவர் தங்கள் குழந்தைகளுக்கு முதலாளித்துவத்தை கற்று கொடுக்கிறார்கள்)

இப்பொழுது காகம் தன் வடையை பாட்டியிடம்  கேட்டது.

முதல் முறைப்போல இல்லாமல் இப்பொழுது
தன் வடையை உரிமையுடன் கேட்டது.

(இந்த இடத்தில உரிமைக்காக போராடும் குணம் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கிறார்கள்)

காகம் முன்பு கேட்டது தானம்,
இப்போதோ அது கேட்பது தன்
உழைப்பிற்கான பலன்.

காகத்திடம் மன்னிப்பு கேட்ட பாட்டி,
காகத்திற்கு வடையை கொடுத்தாள். காகம்
சந்தோஷமாக காட்டிற்கு பறந்தது.

காட்டில், அனைவரையும் ஏமாற்றும்
நரி காகத்திடம் வடையை பார்த்தது.

(இங்கே அவர்கள் உழைப்பை ஏமாற்றி  சுரண்டுபவர்களை பற்றி கூறுகிறார்கள்)

நரி காகத்திடம் அதன் திறமைகளை புகழ்ந்தது.
புகழில் ஒரு நிமிடம் மயங்கிய காகம் வடையை
நரியிடம் பறி கொடுத்தது.

நரி தன்னை ஏமாற்றியதை உணர்ந்த
காகம் விழிப்புணர்வு பெற்றது.

(இந்த இடத்தில் விழிப்புணர்வின் முக்கியதுவத்தை அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்)

"நீ ஏமாற்றப்பட்டால் விழிப்புணர்வு அடைய வேண்டும்,
இல்லையேல் மீண்டும் அதேபோல் ஏமாறுவாய்" என்பது இதன் சாரம்.

விழிப்புணர்வு அடைந்த காகம் மிகவும் பலமாக கரைந்தது.
அதன் குரலை கேட்ட  ஆயிரக்கணக்கான
காகங்கள் அந்த இடத்தில் திரண்டன.

(இந்த இடத்தில் குழந்தைகள்
தொழிலாளர் ஒற்றுமையை கற்றுக்கொள்கிறார்கள்)

அன்று அந்த காகத்திற்கு வடை மட்டும் கிடைக்கவில்லை.
உழைப்பை சுரண்ட நினைத்த நரி பல
ஆயிரக்கணக்கான காகங்களுக்கு உணவானது.

இந்த கதை நமக்கு மிகவும் பரிச்சியமானது தான். ஆனால் இந்த கதையில் குழந்தைகளுக்கு இவ்வளவு கற்றுக்கொடுக்க முடியும் என்பதை நினைத்து வியப்பாக உள்ளது

நாம் எப்படி கற்றுக்கொடுத்தோம்
பாட்டியை காகம் 'ஏமாற்றியது'
காக்காவை நரி 'ஏமாற்றியது'
இதுதான் நாம் சொல்லிக்கொடுத்தது

அவர்கள் வாழ்வின் நெறிமுறைகளை
கற்பிக்கிறார்கள்.

நல்லதை யார் சொன்னால் என்ன
ஏற்போம் கற்பிப்போம்...

No comments:

Post a Comment