Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 22 October 2016

SABL ஏற்கக் கூடிய ஒன்றா? இணையத்தில் ஓர் கட்டுரை !! கற்பிப்பு முறைகளும் கள(கால)த் தேவையும்

SABL ஏற்கக் கூடிய ஒன்றா? இணையத்தில் ஓர் கட்டுரை !!
கற்பிப்பு முறைகளும் கள(கால)த் தேவையும்:

*செயல்வழிக் கற்றல் எளிமைப்படுத்தப்பட்டதா?*

SABL மிக எளிய நடைமுறையாக இருக்க வேண்டுமெனில், ஒரு வகுப்பில்

1. மாணவர்கள் மீத்திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும்.

2. மாணவர் எண்ணிக்கை 15

3. ஆசிரியர் துடிப்பான & உடல் வலிமை மிக்கவராக இருத்தல்.

ஆகிய இம்மூன்றில் ஏதேனும் 2 கூறுகள் இருந்தே ஆகவேண்டும்.

2 கூறுகள் கூட இல்லையெனில் SABL நடைமுறை 100% வெற்றி பெறவது இயலாது.

SABL ஏற்கக் கூடிய ஒன்றா?

மேலை நாடுகள் சிலவற்றிலும் இம்முறை உள்ளது. ஆனால் அங்கு ஆசிரியர் மாணவர் விகிதம் பின்பற்றப்படுகிறது. உதாரணமாக அமெரிக்காவில், 5 வயதினருக்கு 1:10, 7 வயதினருக்கு 1:12 என்று மாணவர் விகிதம் வயதைப் பொறுத்து நடைமுறையில் உள்ளது. மேலும், பல்வகுப்புக் கற்பித்தல் இல்லை. இதுபோன்ற நடைமுறை இங்கும் பின்பற்றப்படுமாயின் இது ஏற்கக் கூடியதே!

*சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளனரா?*

ஆம். நானல்ல, எனது நண்பர்கள் சிலர் SABL-ஐ மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகின்றனர். அவர்களின் வகுப்பறை மேலே கண்ட கூறுகளில் ஏதேனும் 2-னை உடையதாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக இவர்கள் சோர்வறியாதவர்கள். மாணவர் எண்ணிக்கை கூடும் சூழலில் அவர்களும் மலைத்ததுண்டு. அவர்களின் வலிமை அவ்வேளையில் உற்ற துணையாக இருந்துள்ளது.

*SABL சிறப்பாக உள்ளதா?*

என்றால் இல்லை என்பதே விடை. புத்தகம் - அட்டை என பல குழப்பங்களை உள்ளடக்கியுள்ளது. 2-ற்கும் இடையே அதிக வேறுபாடுகளும் உள்ளது. ஏணிப்படி நிலையிலும் முன்பின் முரண் & பாடப்பகுதி இல்லாதது என பல குறைபாடுகள் உள்ளது.

"தனியாள் வேற்றுமை" என்ற பதத்தை உளவியல் தேர்வோடு மறந்துவிட்ட கல்வித்துறை அலுவலர் & அதிகாரிகள், ஆசிரியர் என்பவரும் மானுடன் தான்; அவருக்கும் மானுடத்திற்குரிய அனைத்து உளவியல் & உடலியல் கூறுகள் உண்டு என்பதையும் மறந்து மறத்துப் போய்விட்டதன் விளைவே ஒரே எதிர்பார்ப்பில் அனைத்துப் பள்ளிகளையும் பார்வையிடுதல் என்பது.

நோயுற்றவனைச் சோதித்து தான் மருந்துகள் வெளியிடப்படும். ஆனால் கல்வித் துறையில் மட்டும் மிகச் சிறந்த மீத்திறன் மாணவர் பெரும்பான்மையாக உள்ள பள்ளிகளில் தங்களின் பயிற்றுவிப்பு நடைமுறைகளைச் சோதித்துவிட்டு அதனை மாநிலம் முழுமைக்கும் நடைமுறைப்படுத்துவதோடு, அதே விளைவு அனைத்துப் பள்ளிகளிளும் எதிர்பார்க்கப்படுகிறது.

*என்னதான் செய்வது?*

கல்விக் கொள்கைகளை விவாதத்திற்கு உட்படுத்துதல் எவ்வளவு இன்றியமையாததோ அதே அளவு முக்கியமானது கற்பித்தல் முறைகளைப் பற்றிய விவாதங்களும்.

கற்பித்தல் முறைகள் தொடர்பான விவாதத்திற்கு எந்தவொரு ஆசிரிய இயக்கமும் முன்வந்ததாக எனக்கு நினைவில்லை. அதிகார வர்க்கத்தின் திணிப்பை எவ்வித விமர்சனமும் இன்றி அப்படியே பின்பற்றி வரும் நிலை தான் இன்றும் உள்ளது.

கற்பித்தல் முறை என்பதும் ஆசிரியர் & மாணவர்சார் பிரச்சினையே என்பதை அனைத்து இயக்கங்களும் உணர வேண்டும்.

நடைமுறையில் உள்ள SABL, SALM, ALM என அனைத்து கற்பித்தல் முறைகளையும் ஆசிரிய இயக்கங்கள் தாமே முன்வந்து தனதளவில் ஆய்வு செய்திட வேண்டும். ஏனெனில் நடைமுறைச் சிக்கல்களை பச்சை மையில் கையொப்பமிடும் அதிகாரிகள் அல்ல பச்சைக் குழந்தைக்குப் பாடம்புகட்டும் ஆசிரியர்கள் தான் அறிவர்.

ஆண்டுதோறும் கோடிக்கணக்கான நிதி குறு / வட்டார வளமையப் பயிற்சிகள் என்ற பேரில் களத்தேவைக்கு ஏற்பில்லாத பணியிடைப் பயிற்சிகளால் வீணாகிக் கொண்டு தான் உள்ளது. காரணம் இப்பயிற்சிகளை முடிவு செய்வது அதிகார வர்க்கமாக உள்ளதே அன்றி, தனது தேவையை உணர்ந்த ஆசிரியர்கள் / ஆசிரியப் பயிற்றுநர்கள் அல்ல.

நாடாக் கோப்பில் முன்மொழியப்படும் திட்டங்கள் எந்த அளவிற்கு நடைமுறைச் சாத்தியம் உள்ளது என்பதை ஆய்ந்து தெளியும் அறிவுப் பணியில் ஆசிரிய இயக்கங்கள் கவனம் செலுத்தி, ஆய்ந்து செயல்படுத்த முன்வர வேண்டும்.

இப்படிப்பட்ட ஆய்வுகளை நடைமுறைச் சாத்தியத்திற்கு ஏற்றதாக்கும் பொறுப்பும் கடமையும் இயக்க உறுப்பினர்களான ஆசிரியர்களிடமே உள்ளது.

உடல் நலம் பெற வேண்டுமெனில் பிணியாளிக்கான மருத்துவ முறையை  மருத்துவர் தான் நிர்ணயிக்க வேண்டும். நாடு வளம்பெற வேண்டுமானால் மாணவர்களுக்கான பயிற்றுவிப்பு முறையை ஆசிரியர் தான் தீர்மானிக்க வேண்டுமே அன்றி பயிற்றுவிக்கும் சூழலே அறியாத ஆட்சிப்பணி அதிகாரிகள் அல்ல.

_*✍🏼சிறுதுளி💧

No comments:

Post a Comment