Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 26 May 2016

ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் எப்படி இருக்க வேண்டும்.

செப்டம்பர் 27 , 1979. தமிழக சட்டமன்றத்தில் புயல் அடித்தது போல இருந்தது . காரணம் அன்றைக்கு எதிர் கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி எம்.ஜி.ஆர் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி கண்டனத் தீர்மானம் ஒன்று கொண்டுவந்தார் . அந்த விவகாரம் "பல்கேரியா பால்டிகா" விவகாரம் என தமிழக சட்டமன்ற வரலாற்றில் முக முக்கிய சர்ச்சைக்கு வித்திட்டு பரபரப்பாக இடம் பிடித்த பெயர் .

அதென்ன "பல்கேரியா பால்டிகா"..? என்பது தானே உங்கள் கேள்வி . அன்றைக்கு தமிழக மக்களுக்கே இது என்ன புதுசா இருக்கே , இந்திப்பேரா இருக்குமோ என்று தான் நினைத்திருப்பார்கள் . பல்கேரியா தமிழக மக்கள் அதிகம் அறிந்திருக்காத ஒரு நாட்டின் பெயர் . ஆனால் 1979 ஆம் ஆண்டு தமிழக ஊடகங்கள் பல்கேரியா என்ற பெயரை தவிர்த்து தினசரிகளை கொண்டுவரவே முடியாமல் போனது .

தமிழக அரசின் "பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் " சார்பாக அன்றைய எம்.ஜி.ஆர் அரசு பல்கேரியா நாட்டிடம் இருந்து இரண்டு கப்பல்களை வாங்க முடிவு செய்திருந்தது . அந்த கப்பல்களின் பெயர் தான் "பல்கேரியா பால்டிகா ". இந்த விவகாரத்தில் தான் ஊழல் நடந்திருப்பதாகவும் 4 கோடி ரூபாய் லஞ்சம் பேசியிருப்பதாகவும் அதில் ஒரு கோடி ரூபாயை லஞ்சமாக முதல்வர் எம் .ஜி.ஆர் வாங்கி இருக்கிறார் என்றும் சட்டமன்றத்தில் வைத்து குற்றம் சுமத்தினார் எதிர் கட்சி தலைவர்  கலைஞர் . குற்றச்சாட்டு என்றால் ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஏனோ தானோ என்று கலைஞர் வைக்கவில்லை .  ஊழல் நடந்திருப்பது உண்மை என நிரூபிக்க  அடுக்கடுக்காக சுமார் 20 ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக அவைக்கு சமர்பித்து கலைஞர் அமர்ந்தபொழுது மாண்பு பொருந்திய அவை ஸ்தம்பித்துக் கிடந்தது . இத்தனை ஆதாரங்கள் எப்படி கலைஞருக்கு கிடைத்தது என ஆளும் தரப்பு அதிர்ந்து விட்டது . அது தான் கலைஞர் . ஒரு எதிர் கட்சி தலைவராக கலைஞர் சட்டமன்றத்தில் ஆளும் அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் என்றால் அது சாலப் பொருந்தக்கூடிய வர்ணனையே .

மறுநாள் சட்டமன்றத்தில் இதற்கு பதில் அளித்து எம்.ஜி.ஆர் பேசுகையில் சொன்னார் " எவ்வளவு பலவீனமான இயந்திரத்தை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறோம் என்பதற்கு எதிர் கட்சி தலைவர் சுமத்திய குற்றச்சாட்டுகளும் சமர்பித்த ஆதாரங்களுமே சான்று " என்றார் . உடனே எழுந்த கலைஞர் அப்படியென்றால் இந்த ஊழல் விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதியை வைத்து விசாரிக்க அரசு தயாரா ? " என்றார் . தாமதிக்காமல் எழுந்த எம்.ஜி.ஆர் எதிர் கட்சி தலைவரின் சவாலை ஏற்று விசாரணைக்கு சம்மதித்தார் . அது தான் எம்.ஜி.ஆர் .

ஆக சட்டமன்றத்தில் ஒரு எதிர் கட்சி தலைவராக எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் , ஆளும் கட்சியாக எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு எப்படி செவிசாய்க்க வேண்டும் என்பதற்கு மேலே சொன்னவை ஒரு உதாரணம்.

நவம்பர் 24, 1981 . தமிழக அரசியல் அல்ல ..இந்திய அரசியலே காணாத ஒரு விசித்திரம் தமிழகத்தில் நடந்தது . ஆளும் அரசு ஒரு விசாரணை கமிஷன் அமைத்தால் , கமிஷன் சமர்பிக்கும் அறிக்கையை முதல்வர் சட்டமன்றத்தில் வெளியிடுவர் . இந்திய அளவில் இது தான் நடைமுறை . ஆனால் தமிழகத்தில் அன்று ஆளும் அரசு வெளியிடுவதற்கு முன் எதிர் கட்சி விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிட்டது . என்ன கமிஷன் அது ? சொல்கிறேன்...

திருசெந்தூர் முருகன் கோவிலில் இருந்த வைரவேல் ஒன்று திடுமென காணமல் போயிற்று . அன்றைக்கு அறநிலைய துறை அமைச்சராக இருந்தவர் திரு .ஆர்.எம்.வீரப்பன் . "வீரப்பா வீரப்பா வைர வேல் எங்கப்பா.." என்ற முழக்கம் திமுக மேடைகளில ஒலித்துக்கொண்டிருந்தது . இதை தொடர்ந்து திருசெந்தூர் கோவில் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் விடுதி அறையொன்றின் குளியலைறையில் அறநிலையத் துறையின் தணிக்கை அதிகாரியாக இருந்த சுப்ரமணியப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டார் . இப்படித்தான் செய்தி ஊடகத்தில் சொல்லப்பட்டது . ஆனால் அது கொலை என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்தி வெளியானது  . விடுவாரா கலைஞர் . கெட்டியாக இந்த விவகாரத்தை பிடித்துக்கொண்டார் . களத்தில் இறங்கினார் எதிர் கட்சி தலைவர் கருணாநிதி . விசாரணை கமிஷன் அமைத்தே தீர வேண்டும் என சட்டமன்றத்தில் ஆளும் கட்சியை உலுக்கினார் . எதிர் கட்சிகளின் நிர்பந்தத்தை மீறி எம்.ஜி.ஆர் அரசு ஒன்றும் செய்ய முடியவில்லை , விசாரணை கமிஷனுக்கு ஒத்துக் கொண்டது அரசு . நீதிபதி சி.ஜெ .ஆர்.பால் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது . விசாரணை நடந்தது நடந்தது நடந்துகொண்டேயிருந்ததே ஒழிய அறிக்கை தாக்கல் செய்யப்படவேயில்லை . திடீரென ஒரு நாள் பார்த்தால் பால் கமிஷனின் விசாரணை அறிக்கை தமிழகத்தின் அனைத்து ஊடகத்திலும் வெளியானது . உபயம்..? வேறு யார் .. எதிர்க்கட்சித்தலைவரான சாட்சாத் கருணாநிதி தான் . எம்.ஜி.ஆர் அரசுக்கு இது ஒரு தலைகுனிவு மட்டுமல்ல , அவர் தலைமையேற்ற அரசின் "ரகசிய காப்புக்கு " விடப்பட்ட சவால் . கொதித்துப்போனார் எம்.ஜி.ஆர்.

இப்படி ஆளும்தரப்பை தொடர்ந்து கொதி நிலையிலேயே வைத்திருந்த ஒரு எதிர் கட்சி தலைவர் தமிழக  சட்டமன்ற வரலாற்றில் ஒருவர்  உண்டென்றால் அது கலைஞர் கருணாநிதி தான் . ஆளும் கட்சியாக இருக்கும்போது தண்ணீரில் இருக்கும் பாஸ்பரஸ் போல அமைதியாகத்தான் இருப்பார் . எதிர் கட்சியாக வரும்போது தண்ணீரி காய்ந்த பாஸ்பரஸ் ஆகி பக் என்று பத்திக்கொள்வார் . ஆளுங்கட்சி தலைவராக இருந்த கலைஞர் மீது எனக்கு அனேக விமர்சனங்கள் உண்டு . ஆனால் ஒரு எதிர் கட்சி தலைவராக துடிப்போடு செயலாற்றிய அவர் மீது எனக்கு வியப்பு மட்டுமே .

ஒரு வழியாக பால் கமிஷனின் அறிக்கையை ( செய்தித் தாளில் கலைஞர் வெளியிட்ட அதே அறிக்கையை) , எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் வெளியிட்டார் . இப்படி ஒரே அறிக்கை இரண்டு முறை வெளியிடபட்ட கூத்து அப்போது மட்டுமே நடந்திருக்கிறது . சரி கமிஷன் அறிக்கை வந்துவிட்டது . இனி நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையா. ? எம்.ஜி.ஆர் அரசு கிணத்தில் போட்ட கல்லாக கிடந்தது . விடுவாரா கலைஞர் ? எதிர் கட்சி தலைவராயிற்றே ...நீதி கேட்டு திருசெந்தூருக்கு நடை பயணம் போனார் கலைஞர் . (குறிப்பு : அன்றைக்கு யாரும் கலைஞருக்கு சக்கரை நோய் அதான் நடக்கிறார் என்று பழிக்கவில்லை ) காலெல்லாம் கொப்புளங்கள் வந்த பின்னும் காலில் கட்டு கட்டிக் கொண்டு அவர் சென்ற நடை பயணத்தை ஊடகங்கள் சிலாகித்தன ...ஆனால் இந்த நடை பயணத்தை கிண்டல் செய்து அதிமுக அமைச்சர் திரு.ஹண்டே சட்டமன்றத்தில் இப்படி சொன்னார் . "கருணாநிதி திருசெந்தூர் போனார் . ஆனால் அவரை பார்க்கப்பிடிக்காமல் அந்த திருசெந்தூர் முருகன் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்டார் " என்றார் கிண்டலாக . வேறுயாராக இருந்தால் என்ன இப்படி நம்மை கிண்டலடிக்கிரார்களே என்று நாக்கை துருத்தியிருக்க கூடும் . ஆனால் கலைஞர் ஆயிற்றே . அமைதியாக எழுந்து ஹண்டேவை  பார்த்து சொன்னார் . "நான் இதுவரை வைரவேல் மட்டும் தான் காணாமல் போயிற்று என்று நினைத்திருந்தேன் . இப்போது அமைச்சர் சொல்லித்தான் தெரிகிறது திருசெந்தூர் முருகன் சிலையே காணாமல் போயிருக்கிறது என்று " . அதுவரை சீரியஸாக இருந்த சட்டசபை  களுக்கென்று சிரித்துவிட்டது . எம்.ஜி.ஆர் உட்பட .

இப்படி எப்போதுமே தன் விவாதங்களால் எதிர் கட்சிக்கு ஒரு கடிவாளமாக இருந்தார் கலைஞர் . எப்போதும் தன்னுடைய குற்றசாட்டுகளுக்கு கலைஞர் ஆதாரங்களை சமர்பித்தே விவாதம் செய்வார் . அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் ஒருமுறை அவையில் எழுந்து "இந்த ஆதாரங்கள் எல்லாம் எதிர் கட்சி தலைவருக்கு எப்படி கிடைக்கின்றன ? " என்று கேள்விஎழுப்பியபோழுது அன்றைக்கு சபாநாயகராக இருந்த (அதிமுக காரர்) க.ராசாராம் "ரகசியம் வெளியே போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அரசாங்கத்தின் கடமை " என அரசுக்கு அறிவுறுத்தினார் .இன்றைக்கு இப்படி ஒரு சபாநாயகர் முதலமைச்ச்சரை பார்த்து இப்படி அறிவுறுத்தினால் அடுத்த நாளே அந்த இருக்கைக்கு வேறொரு சபாநாயகர் வந்துவிடுவார் . ஆனால் எம்.ஜி.ஆரோ சபாநாயகர் இப்படி சொன்ன வுடன் இருக்கையில் இருந்து எழுந்து   கண்கள் சிவக்கவில்லை , நரம்பு புடைக்கவில்லை , திராணி இருக்கிறதா என்று விரல் நீட்டி எச்சரிக்கவில்லை மாறாக  கலைஞரை பார்த்து சொன்னார் . "ஒரு உண்மையை வெளிக்கொண்டுவர ஆதாரங்களை சொல்வது அரசுக்கு உதவியாக இருக்கிறது . ஆனால் இந்த ஆதாரங்களை முன்கூட்டியே அரசுக்கு கொடுத்திருந்தால் தகுந்த பதில் அளிக்க வசதியாக இருந்திருக்கும் " என்றார் . கலைஞரை பேச விட்டு பேச விட்டே அமைதிபடுத்தினார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் . இது தான் எதிர் கட்சிகளை நடத்தவேண்டிய முறையும் கூட .

ஆனால் இப்படி பட்ட சட்டசபை எல்லாம் நான் பிறப்பதற்கு முன்பு தான் நடந்திருக்கிறது என்று நூலகத்தில் படித்து தெரிந்துகொள்ளும்போது  வருத்தமாகத்தான் இருக்கிறது . அன்றைக்கு ஆளுங்கட்சியை கதிகலங்கசெய்த கலைஞர் ஏனோ ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு சட்டமன்றம் போவதையே தவிர்த்தார் . அது ஒரு மோசமான முன்னுதாரணமாகிப்போனது .

இன்றைக்கோ எதிர்கட்சிகள் கிண்டல் செய்தார்கள் கேலி செய்தார்கள் அவதூறு பேசுகிறார்கள் என்று எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு செய்கிறேன் என்று கிளம்பி வந்துவிடுகிறார்கள் . சட்டசபைக்குள்ளேயே இருந்து அரசை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்பதை கலைஞரிடம் இவர்கள் கற்றுக்கொள்ளவேயில்லை .

இப்போது அமைய விருக்கும் புதிய சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கவிருக்கும் திரு.ஸ்டாலின் அவர்கள் தன் தந்தையின் வழியில் அவையில் செயல்படுவது அவசியம் .அது தான் மக்கள் நலனுக்கு நன்மை பயக்கும் . இந்த செயல்பாடு தான்  திமுகவின் எதிர்காலமும் கூட . நிச்சயம் ஜெயலலிதாவிடம் எம்.ஜி.ஆரின் சாயலை எதிர்  பார்க்க முடியாது . ஆனால் நீங்கள் கலைஞரின் மகன் . உங்களிடம் ஒரு எதிர் கட்சி தலைவராக எம்.ஜி.ஆர் காலத்து கலைஞர் போல செயல்படுவீர்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கவேசெய்கிறது . அரசு இடரும் போது இழுத்துப் பிடித்து ஒரு நிலையில் நிறுத்தவேண்டிய பொறுப்பு எதிர் கட்சி தலைவருக்கே இருக்கிறது .

பதவியேற்பு  விழாவில் தகுந்த இடம் தரவில்லை என்று பிறரும் உங்கள் தந்தையும்  அதை சர்ச்சையாக்கினாலும் நீங்கள் மெளனமாக அதை கடந்து போனீர்கள் . அது சம்பந்தமாக ஒரு எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை . இந்த நாகரீகத்தை நான் ரசித்தேன் . இங்கே முன் வரிசையில் சீட்டு கிடைப்பதல்ல இப்போது மக்களுக்கு முக்கியம் . சட்டமன்றத்தில் உங்கள் செயல்பாட்டின் மூலம் சட்டசபை வரலாற்றில் இடம் பிடிப்பதே முக்கியம் . அதுவே மக்கள் நலன் சார்ந்த ஒரு எதிர் கட்சி தலைவராக உங்களுக்கு பெயர் வாங்கித்தரும் . தேவை எழுந்தால் ஒழிய அவையை விட்டு வெளிநடப்பு செய்யாமல் நீங்களும் பெருவாரியான உங்கள் கட்சி உறுப்பினர்களும் ஆளும் கட்சியின் மனசாட்சியை பிடித்து உலுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு . நான் நம்புகிறேன் . இந்த 2016 -2021 காலத்தின் சட்டசபை மீண்டும் மாண்பை மீட்டெடுக்கட்டும் . எனது வாழ்த்துக்கள் !.

No comments:

Post a Comment